மூன்று மாத கர்ப்பிணி பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை..!! தமிழகத்தில் நடந்த பெரும் சோகம்!
இந்தியாவில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் நெய்வேலி NLC நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகளான 25 வயதுடைய வனிதா என்பவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வனிதாவிற்கும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் சேட்டு என்பவரின் மகன் 32 வயதுடைய ராஜன் என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது வனிதாவுக்கு அவர்களது பெற்றோர்கள் 20 பவுன் தங்க நகை, கட்டில் , பீரோ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக வழங்கியுள்ளனர். இவ்வளவு சீர்வரிசை கொடுத்தும் போதாது என்று ராஜன் கார் வேண்டும் என சீர்வரிசையாக கேட்டார். அதற்கு வனிதாவின் பெற்றோர் காருக்கு பதிலாக 1.50 லட்சம் ரூபாய் பணம் கையில் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் வேலை செய்து வந்த ராஜன் தற்போது வேலையின்றி வீட்டில் இருந்து வந்தார். திருமணம் இடம்பெற்ற நாளில் இருந்து அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி வனிதாவிடம் தொடர்ச்சியாக தகராறில் ஈடுபட்டு அடித்து துன்புறுத்தி வந்த நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன்னர் புதிதாக பைக் வாங்கி தருமாறு ராஜன் மற்றும் அவரது பெற்றோர் வனிதாவிடம் கூறியதை அடுத்து அவர் அதை அவரது தந்தையிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் நெல் அறுவடை முடிந்ததும் வாங்கித் தருகிறேன் என தெரிவித்துள்ளார்.
அதற்கு இடையில், ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் வனிதாவை உடனே பணம் வாங்கி வா என கூறியதுடன், கார் கேட்டதற்கு உங்க அப்பா வாங்கி தரவில்லை. இப்போது பைக் கேட்டும் ஏன் வாங்கி தரவில்லை. அதற்கான பணத்தை பெற்று கொண்டு வா என கூறி கணவனும், மாமியாரும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் , வனிதா மனவேதனையில் இருந்து வந்துள்ளார் . வனிதா தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் நள்ளிரவில் தம்பதியினருக்கு இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜன், வனிதாவிடம் உன் அப்பாவிடம் போய் பணம் வாங்கி வா இல்லாவிட்டால் செத்துவிடு என்று கூற, இதனால் கவலை அடைந்த வனிதா வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டுள்ளார். இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மருத்துவ சிகிச்சையின் போது, வனிதா நீதிபதியிடம் அளித்த மரண வாக்குமூலத்தில் , கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வனிதாவின் தாயார் செல்வி பொலிசாரிடம் அளித்த புகாரை வைத்து, கணவர் ராஜன் , தந்தை சேட்டு , தாய் கஸ்தூரி , சகோதரன் ராமச்சந்திரன் , சகோதரிகள் ராஜேஸ்வரி , அம்பிகா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.