உக்ரைன் விமானத்தைச் சுட்டவர்கள் கைதானதால் ஈரானில் பரபரப்பு!
“உக்ரைன் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்” என ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – ஈரானிடையே போர்ப்பதற்றம் நிலவிய நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து, உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கிச் சென்ற உக்ரைன் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில், 176 பேர் பலியாகினர்.
இதனையடுத்து, பல்வேறு நாடுகள் இந்தச் சம்பவத்துக்காக ஈரானுக்குக் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, தவறுதலாகச் சுடப்பட்டுவிட்டது எனக் கூறிய ஈரான் அரசு, அதற்கான வருத்தத்தையும் தெரிவித்தது.
இந்நிலையில், குறித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஈரான் அரசு அறிவித்துள்ளது. அத்துடன் அவர்களிடம் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஈரானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார்.
அதில் அவர்,
“விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பில், தவறுதலாக – அலட்சியமாக நடந்து கொண்ட அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவர். இது நாட்டு மக்களுக்கும் முக்கியமான தருணமாகும். உயர் நீதிபதிகளையும், வல்லுநர்களையும் உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றத்தை நீதித்துறை அமைக்க வேண்டும்.” என்றார்.