இலங்கை – யாழில் படையினரிடம் அதிகாரத்தை வழங்கவுள்ள ஆவாகுழு – இன்றும் அட்டகாசம்
யாழ்ப்பாணத்தில் ஆவா குழு எனப்படும் சமூக விரோதக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொள்வதாகக் காட்டிக் கொள்கின்ற போதிலும் அக் குழுக்களின் அட்டகாசம் அடிக்கடி இடம்பெற்றே வருகின்றது.
அதற்குத் தீர்வாக வடபகுதி இராணுவத் தளபதி தம்மிடம் அதற்கான பொறுப்பை வழங்கும் பட்சத்தில் ஆவாக் குழுவின் செயற்பாட்டை முற்றாக கட்டுப்படுத்த தம்மால் முடியும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்றும் யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நுழைந்த ஆவாக்குழுவினர் 9 பேர் அங்கு தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதன் போது ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்திற்கு அருகிலிருந்த வீடு ஒன்றிலேயே இத் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது. தாக்குதல் நடைபெற்ற வீட்டில் இதற்கு முன்னரும் ஒரு தடவை ஆவாக்குழு தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.