விமானத்தில் தமிழில் அறிவிப்புச் செய்ததற்குப் பயணிகளிடையே நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – சிங்கப்பூரின் ஸ்கூட் விமான நிறுவனம்
விமான நிலையத்திலும், விமானத்திலும் தமிழில் அறிவிப்புச் செய்ததற்குப் பயணிகள் இடையே நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சிங்கப்பூரின் ஸ்கூட் விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சிங்கப்பூர் விமானமான ஸ்கூட்டில் விமானியாக பணியாற்றிய சரவணன் அய்யாவு சமீபத்தில் சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குபறந்த விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்தார். இந்த ஓடியோ பதிவை பேஸ்புக்கில் அவர் பதிவிட்டுள்ளார்.
விமானத்தில் தமிழில் அறிவிப்புச் செய்வது தன்னுடைய நீண்ட கால எண்ணம் என்றும் அதற்கு அனுமதி வழங்கிய விமானத்தின் கப்டனுக்கு நன்றி கூறியும் அந்த பதிவில் சரவணன் தெரிவித்துள்ளார். விமானம் தரையிறங்கும் முன்னர் நேரம், பருவநிலை இந்த பயணிகளுக்கு விமானிகள் அறிவிப்பர். இந்த அறிவிப்பை அவ்வப்போது நான்கு மொழிகளிலும் முன்பதிவு செய்வது சிரமம் என்று விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூர் செய்தி நிறுவனமான மீடியாகார்ப்பின் தமிழ்ச் செய்தி பிரிவுக்கு அந்த நிறுவனம் கொடுத்த விளக்கத்தில் விமானி சரவணன் தமிழ்ப் படைப்பாளராக அனுபவம் இருந்ததால், தமிழில் அறிவிக்கும் அவருடைய கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.