யாழ் சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு…!!!
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் இன்று (17) சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று காலை 10 மணிக்கு குறித்த விமான நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து அங்கு நடைபெற்ற நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். மேலும் இந்தத் திறப்பு விழா நிகழ்வில் ஜனாதிபதியுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உட்பட்ட உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு அதிதிகள் பலர் கலந்துகொண்டார்.
அதன் அடிப்படையில் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேரடி விமான சேவைகளும் இந்திய பிராந்திய விமான நிலையங்களான சென்னை, திருச்சி மற்றும் கொச்சியிலிருந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி விமான சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாகும். இது யாழ். நகரிலிருந்து 20 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. விமான நிலையத்தின் ஓடுபாதை, 2.3 கிலோமீற்றர் வரை புதிதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கும் ஓடுபாதை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாளாந்த விமான நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.