கணவனை இழந்த விதவை பெண்ணை திருமணம் செய்வதாக கூறி அவரிடம் இருந்து பணம், நகைகளை மோசடி செய்த நபர்..!!
சென்னை மாதாவரத்தை சேர்ந்த 24 வயதுடைய விதவை பெண் ஒருவர் மறுமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் மையத்தில பதிவு செய்துள்ளனர். அதைக் கண்ட 34 வயதுடைய ரமேஷ் என்பவர், அந்த விதவையை தொடர்பு கொண்டார். தான் துறைமுகத்தில் அதிகாரியாக இருப்பதாகவும், ஒரு விதவைப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதே தனது லட்சியம் எனவும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, கடந்த வருடம் அக்டோபர் மாதம் ரமேசுக்கும், விதவை பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்துக்கு 25 பவுன் தங்க நகைகளும், ரூ.1 லட்சமும் வரதட்சணையாக பேசப்பட்டது.
குறித்த விதவை பெண்ணின் பெற்றோர் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்களுக்கு வழங்கி வந்தனர். நிச்சயதார்த்தம் முடிந்து சில நாட்கள் விதவை வீட்டில் தங்கி இருந்த ரமேஷ், தனது நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு வரதட்சணைக்காக வீட்டில் வாங்கி வைத்து இருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். ஆனால் அதற்கு பிறகு அவர் திரும்பிவரவில்லை.
அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் வீட்டில் இருந்த நகை, பணம் மாயமாகி இருப்பதை கண்ட விதவையின் பெற்றோர், ரமேஷ் மோசடி செய்து விட்டதை அறிந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கொடுத்த புகாரில் பொலிசார் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. ரமேசுக்கு, ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணமாகி, 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. மாமியார் வீடான பம்மலில் வசித்து வந்த ரமேஷ், தான் ஒரு அரசு அதிகாரி என கூறி அந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணத்துக்கு பிறகு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
மேலும் அவர் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த நிலையில் தலைமறைவான ரமேஷை பொலிசார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.