மைத்திரி மற்றும் ரணில் மீது குற்றம் சுமத்துகிறாரா சரத் பொன்சேகா??
பாதுகாப்பு அமைச்சை தன்னகத்தே வைத்திருக்க முடியாத கோட்டாபய எவ்வாறு பாதுகாப்பு துறையினருக்கு கட்டளையிட முடியும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்றைய தினம் மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் இந்த செயற்பாட்டால்ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களைப் போன்று மற்றுமொரு சம்பவம் நடைபெற்றால் நாட்டில் பொறுப்பு கூறுவதற்கும் யாரும் இல்லை என்று குறிப்பிட்டார். ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான குழுவில் நானும் அங்கத்துவம் வகித்தேன்.
68 பக்கங்களில் நான் தனியாக ஒரு அறிக்கை தயாரித்திருக்கிறேன். அதில் முதலாவது குற்றவாளியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், இரண்டாவது குற்றவாளியாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும், முன்றாவது குற்றவாளியாக நீதித்துறை அமைச்சரையும், நான்காவது குற்றவாளியாக முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவையும் குறிப்பிட்டிருக்கிறேன்.
ஈஸ்டர் தின தாக்குதல் மற்றும் இலங்கையை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று ஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்துவம் வகித்த சிலர் வெளியிட்ட கருத்துக்கள் என்பனவே ஜனாதிபதித் தேர்தலில் நாம் தோல்வியடைக் காரணமாக அமைந்தது. இறுதி நேரத்தில் இவ்வாறு நடைபெற்றாலும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினோம் என்றும் கூறினார்.