நாங்கள் இரக்கமற்றவர்கள்; கோலியை எச்சரிக்கிறார் டிம்!
2018ஆம் ஆண்டு கோடை காலத்தில் இந்திய அணி அவுஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2:1 என்ற கணக்கில் வென்றது.
அப்போதைய அவுஸ்திரேலிய அணியில் டேவிட் வோர்னர், ஸ்மித் ஆகியோர் இடம்பெற்றிருக்கவில்லை. தற்போது அவர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். அதேவேளை அணியின் துடுப்பாட்ட வரிசையில் மூன்றாவது இடத்தில் மார்னஸ் லாபஸ்சான்னே சிறப்பாக ஜொலிக்கிறார். பந்து வீச்சில் பேட் கம்மின்ஸ் எட்டமுடியாத உச்சத்தில் உள்ளார்.
இதன்பயனாக பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட், நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் என இரு அணிகளையும் வெள்ளையடித்தது அவுஸ்திரேலியா.
இந்நிலையில், இந்த வருடம் நடக்கவுள்ள இருபது-20 உலகக் கிண்ணத் தொடரையடுத்து, இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளன.
இந்தப் போட்டி குறித்து அவுஸ்திரேலிய அணித்தலைவர் டிம் பெய்ன் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியவை வருமாறு-
“இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் விரும்பியதுபோல தற்போது இரக்கமற்ற அணியாக மாறியுள்ளோம். எங்கள் அணி முழுவதும் தரமான வீரர்கள் உள்ளனர்.
கடந்த முறை விளையாடிய அவுஸ்திரேலிய அணியை விட இனி இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ள அணி முற்றிலும் மாறுபட்ட அணி. இரு அணிகளும் விளையாடவுள்ள தொடர்களுக்கு இடையில் டெஸ்ட் சம்பியன்ஷிப்பும் உள்ளது. இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளன” – என்றார்.