3 கிலோ எடையுள்ள இரும்பு குண்டு தலையில் தாக்கி பள்ளி மாணவன் பலி..!! கேரளாவில் நடந்த கொடூரம்..!!
ஹேமர் த்ரோ போட்டியாளரால் வீசப்பட்ட 3 கிலோ எடையுள்ள இரும்பு குண்டு தலையில் தாக்கி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
கேரளாவில் கோட்டயம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய அபீல் ஜான்சன் என்ற மாணவன் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பில் படித்து வந்தார். குறித்த மாணவன் கேரளா மாநில ஜூனியர் தடகளப் போட்டியில் தன்னார்வலராகச் செயல்பட்டு வந்தார்.
கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற தடகளப் போட்டியில் ஈட்டி எறிதல் மற்றும் `ஹேமர் த்ரோ’ பிரிவில் தன்னார்வப் பணியில் ஈடுபட்டிருந்த அபீல், போட்டியாளர்களால் வீசப்பட்ட ஈட்டிகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார்.
அந்தவேளையில் ஹேமர் த்ரோ’ போட்டியாளரால் எறியப்பட்ட 3 கிலோ எடையுள்ள இரும்புக் குண்டு அபீலின் தலையில் பலத்த வேகத்துடன் மோதியது. இதன் போது அவருக்கு மூளையில் காயம் ஏற்பட்ட நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வந்த அபீல் பரிதாபமாக பலியானார்.
மேலும் இந்த சம்பவம் அவரின் குடும்பத்தினரையும், நண்பர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் உயிரிழந்த செய்தியை கேட்டவுடன் அவரின் நண்பர்களையும் கதறி அழுதனர்.
அபீல் மரணம் தொடர்பாக பேசிய பொலிசார், இந்த நிகழ்வின் அமைப்பாளர்கள் மீது சட்டப் பிரிவு 338-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.