ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.மோகன் நேற்று காலமானார்..!!
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி 89 வயதுடைய எஸ்.மோகன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இவரது சொந்த ஊர் உடுமலைப்பேட்டை. கவுதமன் மோகன் என்ற மகனும், சுமதி சுப்பிரமணியன் என்ற மகளும் உள்ளனர். மனைவி திலகவதி ஏற்கனவே இறந்துவிட்டார். 1954 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக தனது பணியை ஆரம்பித்த எஸ்.மோகன், சென்னை உயர்நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார்.
கர்நாடக மாநில பொறுப்பு ஆளுநராகவும் அவர் பதவி வகித்துள்ளார். நீதிபதி மோகனின் இறுதிச் சடங்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெறுகிறது. நீதியரசர் மோகனின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.