கனடாக் கனவில் சென்ற இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்..!!!
சென்னை குரோம்பேட்டை பவானி நகர் பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் ஒருவர் பி.டெக் படிப்பை முடித்துள்ள இவர் இன்று சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சுற்றுச் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் அந்த சாலையின் நடுவில் திருமண நிகழ்வு ஒன்றுக்காக அதிமுக பிரமுகர் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்குப் பின்னால் வந்த தண்ணீர் லொரி, அவரது வாகனத்தில் மோதியது.
இதனால் சுபஸ்ரீ லொரியின் சக்கரத்திற்கு அடியில் சிக்கிப் படுகாயமடைந்தார். அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில், லொரியை ஓட்டி வந்த மனோஜ் என்ற ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடா செல்வதற்காக விண்ணப்பித்திருந்த சுபஸ்ரீ அதற்கான நேர்காணலை முடித்து விட்டு வரும் போது இந்த விபத்து ஏற்பட்டது. உயிரிழந்த சுபஸ்ரீ அவரது பெற்றோருக்கு ஒரே மகள் ஆவார்.
பேனர் வைத்தது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றாலும் மரணத்திற்குக் காரணமாக இருப்பவர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கான 336, 304ஏ பிரிவுகளின் கீழ் பொலிஸ் வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், பேனர்கள் வைப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
சென்னையில் அனுமதியின்றி பேனர் வைத்தால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் சட்டவிரோத பேனர்கள் குறித்து கடுமையான எச்சரிக்கையை விடுத்த நிலையில் பேனர்கள் வைப்பதில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் சாலைகளின் நடுவே பேனர்கள் வைக்க நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில், இன்று பேனரால் ஒரு இளம்பெண்ணின் உயிர் பரிதாபமாக பறிபோன சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் இலங்கையிலும் கோட்டாபய ராஜபக்சவுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து சிலர் கயமைடைந்த நிலையில் சில வாகனங்களும் சேதமடைந்துள்ளது. அதே போன்று தமிழகத்தில் இன்று பேனரால் விழுந்ததில் கனடா செல்ல வேண்டும் என்று ஆசை, கனவோடு வந்த இளம்பெண்ணின் உயிரை காவு வாங்கியுள்ளது.