பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் தமிழ் மக்களுடையது மட்டும் அல்ல தமிழ் பேசும் அனைத்து மக்களுடையதும் தான்..! P2P நடைபயணத்திற்கு குவியும் ஆதரவு..!!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான அமைதிவழி உரிமை போராட்டாம் நேற்றைய தினம் திருகோணமலையில் நிறைவடைந்தது. இன்றைய தினம் அங்கிருந்து புறப்பட்டு பொலிகண்டி நோக்கி செல்லவுள்ளது. தமிழர்களின் காணி ஆக்கிரமிப்பு,மலையக மக்களின் ஊதிய உயர்வு, அடக்கு முறைகள், முஸ்லீம் மக்களின் ஜனாஸா எரிப்பு, என உரிமை மீறல்கள் பலவற்றை நிறுத்தக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப் பட்டு வருகிறது.
இந்து, முஸ்லீம்,கிறிஸ்தவம் என்ற பிரிவினைகளை கடந்து தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் அனைவரும் போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக இலங்கை மக்கள் தமிழ் பேசும் மக்கள் என்றே போராட்டங்களை முன்னெடுத்து வருவதால் அரசு ஆட்டம் காண தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இன்று . திருமலையில் தொடங்கும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி 12 மணியளவில் வவுனியா சென்றடையும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
இந்த பேரணியில் வவுனியா முஸ்லீம்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என மக்கள் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி மற்றும் முகமது லறீப் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கடந்த சில வருடங்களாக சிறுபான்மையினரான நாம் அதிக இன்னல்களை சந்தித்து வருகிறோம்,
இதற்கு தீர்வு காண தமிழ் மக்களுடன் நாமும் இணைவது கட்டாயமாகும். தமிழ் மக்கள் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுக்காகவும் தான் இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். அவர்களுடன் இணைந்து செயற்படுவது கட்டாயமாகும் என அவர்கள் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்..!!