சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுடன் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தவேண்டும் – பிரசன்ன ரணதுங்க
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுடன் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தவேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களை நேசிப்பதால் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான முயற்சிகளை எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள அவர் நாடாளுமன்ற அதிகாரங்களை பயன்படுத்தி ஜனாதிபதி மற்றும் பிரதமர் எடுக்கும் நடவடிக்கைகளை குழப்புவதே அவர்களின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலை நடத்துவதற்காகவே தேர்தல் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது,எந்த சூழ்நிலையிலும் தேர்தல்கள் உரிய விதத்தில் நடைபெறுவதை உறுதி செய்வதே அவர்களின் பணி. இதன் காரணமாக தேர்தல்ஆணைக்குழுவினால் தேர்தலை பிற்போடமுடியாது,அவர்கள் செய்யக்கூடியதெல்லாம் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுடன் தேர்தலை நடத்தவதற்கான பொறிமுறையை உருவாக்குவதே என அமைச்சர் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழு ஜனநாயக உரிமைகளை பலவீனப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் மக்களின் வாக்களிப்பதற்கான உரிமையை பாதுகாப்பதற்காவே தேர்தல் ஆணைக்குழு அமைக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.