ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு நான் முழு ஆதரவு வழங்கியுள்ளேன் – சந்திரிக்கா
இலங்கையில் கடந்த காலத்தில் ஊழல், மோசடிகள் செய்து நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தும், நாட்டு மக்களின் சுதந்திரத்தை சீரழித்தும், கொலைக் கலாசாரத்தை உருவாக்கியும், இரத்தக் களறியாக்கியும் அட்டூழியம் புரிந்த கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வரத் துடியாய் துடிக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.
இது போன்று நாட்டைம், நாட்டு மக்களையும் சூரையாடும் கும்பலைத் தோற்கடிக்கவே புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு நான் முழு ஆதரவையும் வழங்கியுள்ளேன் என சந்திரிக்கா தெரிவித்துள்ளார். கொழும்பு – தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்திற்கும் சந்திரிக்காவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
அதையடுத்து சர்வதேச செய்திச் சேவை ஒன்றின் கொழும்பு செய்தியாளருக்கு வழங்கிய செவ்வியிலேயே சந்திரிக்கா இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் கொண்டு செல்ல நான் விரும்பவில்லை. அதனால் தான் சஜித்தின் கரங்களை நான் பலப்படுத்தியுள்ளேன்.
மூவின மக்களும் இந்த நாட்டில் நிம்மதியாக பெருமூச்சுவிட்டு வாழ வேண்டும். அனைவருக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக சஜித் உத்தரவாதம் வழங்கியுள்ளார். இந்தத் தேர்தலில் அவர் வெற்றியடைவார். அதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.