இலங்கையில் நேற்று மட்டும் எந்தவொரு கொரோனா நோயாளியும் பதிவாக வில்லை – சுகாதார பிரிவு
கடந்த 36 மணித்தியாலத்தில் ஸ்ரீலங்காவில் எந்தவொரு கொரோனா நோயாளியும் பதிவாக வில்லை என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் 16 நாட்களுக்கு ஸ்ரீலங்கா கண்ட முதல் வெற்றியாக இது கருதப்படுகின்றது. கடந்த 10 ஆம் திகதிக்கு பின்னர் எந்தவொரு கொரோனா நோயாளியும் பதிவாகாத நாளாக நேற்றைய தினம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் 99 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
IDH வைத்தியசாலையில் 88 பேரும், வெலிகந்த பிரதேச வைத்தியசாலையில் 10 பேரும், முல்லேரியா வைத்தியசாலையில் ஒரு நோயாளியும் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது. மூன்று வெளிநாட்டவர்கள் உட்பட 255 பேர் வைத்திய கண்கானிப்பின் கீழ் உள்ளதாக சுகாதார துறை குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளிகளில் மூன்று பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நான்கு பேர் குணமடைந்த நிலையில் விரைவில் வீடு செல்லவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் கூறியுள்ளன.