ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் களமிறங்க வேண்டும் என்றால் ரணிலின் நிபந்தனைகளை ஏற்க வேண்டும்..!!
இலங்கையில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நாளைய தினம் கலந்துரையாடல் இடபெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச களமிறங்க வேண்டும் என்றால் ரணிலின் நிபந்தனைகளை ஏற்க வேண்டியுள்ளது. என்றபோதும், சில நிபந்தனைகளை முன்வைத்து அதற்கு சஜித் ஒத்துக் கொண்ட பட்சத்திலேயே தமது முழுமையான ஆதரவை ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பார் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், சஜித்தை கட்சியின் வேட்பாளராக நிறுத்துவதெனில் மத்தியகுழு சம்மதிக்க வேண்டும், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க சஜித் ஒப்புக் கொள்ள வேண்டும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் அனைத்து கட்சிகளும் சஜித்தின் நியமனத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளே முன்வைத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாசவே களமிறக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக காணப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆறாம் திகதி அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பில் வைத்து ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிடுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தார் என தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் ரணில் விக்ரமசிங்கவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற இருந்த போதும் அந்த சந்திப்பு நாளை தினம் நடைபெவுள்ளது.