ஈழத் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த வலி சுமந்த பாடல் சமர்ப்பணம்!!
உலகப் போரியல் விதிகளுக்கு மாறாக, ஈழத்தில் மிகவும் கொடூரமாக லட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டு கடந்த 19ம் திகதியுடன் 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இந்தக் கொடுந் துயரை மறக்காதவர்களாய் – மறக்க முடியாதவர்களாய் இன்னமும் நினைத்து நினைத்து அழுது கொண்டிருப்பவர்களாய் ஈழத் தமிழர்கள்.
எம் ஒவ்வொருவரின் மனங்களில் எல்லாம் பாதுகாப்பு வலயத்தினுள் படு கொலை செய்யப்பட்ட உறவுகளும், கைது செய்யப்பட்டு காணாமற் போகச் செய்யப்பட்ட உறவுகள் பற்றிய சிந்தனைகளுமே வந்து போகின்றது. சர்வதேச மனிதாபிமான சமூகம் மௌனித்த நாள் என்றால் – எம் முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலம் இடம் பெற்ற நாளினைச் சொல்லலாம்.
உலக நீதி செத்து விட்ட நாள், “உலகே உனக்கு கண்ணில்லையா எம் தமிழீழ மண் என்ன மண்ணில்லையா” என்று நாம் கதறிய கதறல் கூட கேட்காது நீதி தேவதையும், சர்வதேசமும் எம்மை பாரா முகமாய் கை விட்ட நாள். இலகுவில் மறக்க முடியாத நாளாய் எம் இதயத்தில் இன்றும் துயர் வாட்ட வைக்கும் முள்ளிவாய்க்கால் பேரவல நாள் மே 19.
அத்தனை எளிதில் மறந்துவிடக்கூடிய ரணமா எம் உறவுகளிற்கு நிகழ்ந்த இந்தப் பேரவலம்? வறண்டு போன நாவினை நனைத்த நீரில் குருதி கலந்திருந்தது…பசியால் குழந்தைகள் துடி துடித்து மரணித்த காட்சிகள் ஒரு பக்கமும் குண்டுகளின் கோரப்பசிக்கு துண்டு துண்டாக உடல்கள் சிதறப்பட்ட கணங்களும் இன்றளவும் குத்திக் கிழித்து இதயத்தை ரணப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றது.
உயிருக்கு போராடும் உறவுகளை தள்ளாடியபடி கடந்து நடந்த கால்கள் மறக்குமா அந்த கொடூர தருணத்தை …மறக்க முடியாத இன்னமும் மறக்காதவர்கள் ஈழத் தமிழர்கள் எனப் பறை சாற்றிட பார்க்கும் ஒவ்வொருவர் கண்களிலும் நீரை வர வைக்கிறது ” வா தமிழா” பாடல்.