ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் பூகம்பம் வெடிக்கும் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு
இலங்கை அரசியல் அமைப்பின் 19வது திருத்த சட்டம் இல்லது ஒழிக்க நடவடிக்கை எடுத்து வரும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகிய இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனை கூறியுள்ளார். மேலும் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,
“அரசியல் அமைப்பின் 19வது திருத்த சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. 19வது திருத்த சட்டத்தின் ஊடாக பிரதமருக்கே அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இது போன்ற நிலையில், 19வது திருத்த சட்டத்தை இல்லாது ஒழிக்க வேண்டும் என கூறி, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அதனை செயற்படுத்துவாராக இருந்தால் பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலின் பின்பு, பிரதமராக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் மகிந்த ராஜபக்ச, அதிகாரங்கள் அற்ற பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ள விரும்பமாட்டார்.
மேலும் இந்த நிலையில் 19வது திருத்த சட்டத்தை இல்லாது ஒழிக்கும் நடவடிக்கையினால் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதை மீறி 19வது திருத்த சட்டத்தை இல்லாது ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனை முழுமையாக எதிர்த்து நிற்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.