முதன் முறையாக நாளை கூடவுள்ள அரசியலமைப்பு பேரவை..!!
கோத்தபாய ராஜபக்ச இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அரசியலமைப்பு பேரவை நாளைய தினம் கூடவுள்ளது. அரசியலமைப்பு பேரவையின் தலைவர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பேரவை கூடவுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவர் நாளைய தினம் கூட்டத்தில் கலந்துக்கொள்ளமாட்டார். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அரசியலமைப்பு பேரவையில் அங்கம் வகித்த சகல உறுப்பினர்களும் நாளைய கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதியான அமைச்சர் மகிந்த சமரசிங்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள ஆகியோர் அரசியலமைப்பு பேரவையின் கூட்டத்தில் கலந்துக்கொள்லவுள்ளனர். சிவில் அமைப்புகளை சேர்ந்த மூன்று பிரதிநிதிகள் அரசியலமைப்பு பேரவையில் அங்கம் வகிக்கின்றனர். அரசியலமைப்பு பேரவையின் பிரதிநிதிகளை நீக்க அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகாரம் இல்லை. அவர்கள் பதவி விலகுவது சம்பிரதாயம் என கூறப்பட்டுள்ளது.