செவியில் தாயின் குரல் கேட்டு..உன் சின்ன சின்ன விழிகள் திறக்கட்டும்…! சியாமளா ராஜசேகர்..!!
தன்னந் தனியாய்ப் பள்ளத்துள்
தாகத் தோடு தவித்தாயோ ?
அன்பைப் பொழியும் உறவுகளை
அங்கே தேடிக் களைத்தாயோ ?
உன்றன் நிலையைக் கண்டவுடன்
உயிரும் வலியால் துடிக்குதடா !
ஒன்றும் பேச வியலாமல்
ஊமை யாக அழுகின்றோம் !!
கண்ணீர் மல்கக் கடவுளிடம்
கைகள் குவித்து வேண்டுகிறோம் !
கண்ணன் உனக்குத் துணையிருப்பான்
கவலை யாவும் தீர்த்திடுவான் !
கண்ணே சுர்ஜித் பொறுத்திடுவாய்
கடந்து வருவாய் சோதனையை !
எண்ணம் முழுதும் நீயேதான்
எழுந்து வாடா என்பிள்ளாய் !!
அவல நிலையும் மாறட்டும்
அமைதி யங்கே மலரட்டும் !
துவண்ட கைகள் வலுபெறட்டும்
துடிப்பாய் இதயம் இயங்கட்டும் !
செவியில் தாயின் குரல்கேட்டுன்
சின்ன விழிகள் திறக்கட்டும் !
உவகைப் பெருக்கால் உலகோரும்
உன்னை வாழ்த்திப் பாடட்டும் !!