துக்ளக் விழாவில் சர்ச்சைப் பேச்சு; இன்று ரஜினி வெளியிட்ட தகவல் மீண்டும் பரபரப்பு!
துக்ளக் பத்திரிகையின் 50ஆவது ஆண்டு விழாவில், “பெரியார் நடத்திய மாநாட்டில் ராமர் படத்தை அவர் செருப்பால் அடித்தார். அது தொடர்பாக செய்தி வெளியிட்ட துக்ளக் இதழுக்கு கருணாநிதி அரசு தடைவிதித்தது’ என்று ரஜினி பேசியிருந்தார்.
இப்படிப் பல சர்ச்சைக்குரிய விடயங்களை அவர் அங்கு பேசியிருந்தார்.
இதனால், ரஜினிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, பெரியார் குறித்துப் பேசியதற்கு ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்கவேண்டும். இல்லையேல் எதிர்வரும் 23ஆம் திகதி காலை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடுவோம் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்துள்ளனர்.
இவ்வாறு பல அமைப்புகள் ரஜினிக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இதையடுத்து ரஜினியின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரியார் குறித்துப் பேசியதற்கு தாம் மன்னிப்புக் கேட்கப்போதில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்,
“இல்லாத விடயத்தை நான் கூறவில்லை. கற்பனையாகவும் எதையும் கூறவில்லை, மற்றவர்கள் கூறியது – பத்திரிகையில் வெளியானவற்றையே நான் கூறியுள்ளேன். எனவே, இதுகுறித்து நான் மன்னிப்புக் கேட்கப்போவதில்லை” என்றார்.
இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.